Saturday, December 15, 2012

முதல்வருக்கு மடல்.




கோவை முன்னாள் காவல் அதிகாரிகள் சங்கத் தலைவர் மதிப்பிற்குறிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பிய மடல் விபரம்.


--------------------------------------------------------------------------------------------31-10-2012.
‘பெருமதிப்பிற்குறிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு.

பொருள்: அண்மையில் திருப்பாச்சேத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொலை- சம்பந்தமாக.

கடந்த 27-10-2012 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடந்த திருப்பாச்சேத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின்சுதன் அவர்களின் கொடூரக் கொலை தமிழகத்தில் பணியாற்றும் மொத்த காவல் துறையினரிடையே ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாகும். துயருற்றுள்ள அக்குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி பொருளாதார உதவிகள் அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். சகல தரப்பினரும் அமைதியில் வாழ காலம் நேரம் பாராது அல்லும் பகலும் அயராது உழைப்பதை தன் தலையாய கடமையென பணிபுரியும் காவல் துறையினரது சிரமங்கள் தாங்கள் அறிந்ததே. அப்படிப் பட்ட காவல் துறையைச் சேர்ந்த ஓர் இளைஞர் தன் கடமையை செய்ய முனைந்தபோது எந்த வித காரணமும் இல்லாமல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது வியப்பையும் வேதனையையும் அளிக்கிறது. காரணமின்றி கொலை செய்யப்படுவது, கடமையாற்றும் காவல் துறையினர் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தமிழ் நாட்டில் தலைத் தூக்கியுள்ளது.

இந்த நாட்டின் விடுதலைக்காக போரிட்டு மாய்ந்த தியாகிகள் இருவரின் குரு பூஜைக்கு சென்று கொண்டிருந்த நபர்கள் கொலை செய்யும் ஆயுதங்களை எடுத்து சென்றது, கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் தலை எடுத்துள்ள, புரிந்த கொள்ள முடியாத கலாச்சாரமாகி வருகிறது. இது கடுமையான உடனடி நடவடிக்கைகளால் அழித்தொழிக்கப்பட வேண்டிய விசயமாகும். தவறினால் தமிழக காவல் துறையினரின் தார்மீக கடமை உணர்வும் தைரியமும் கணிசமாக குறைந்துவிடும் என்பதை முன்னாள காவல்துறை அதிகாரிகளாகப் பணிபுரிந்த நாங்கள் தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருவது எங்களது கடமையெனக் கருதுகிறோம்.

ஆகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள முற்படும் யாரும் தங்களுடன் எந்த விதமான ஆயுதத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது என்பதையும், அவ்வாறு எடுத்துச் செல்பவர்களை கடுமையான சட்டத்திற்கு உட்படுத்தி, இது போல் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் செயல்பட ஏதுவாக நடவடிக்கைகள் எடுத்திட ஆணை பிறப்பிக்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.'
-------------------------------------------------------------------------------இங்ஙனம்,
-------------------------------------------------------------(ஒ.ம். ஆர்.வெள்ளிங்கிரி)’
    -----------------------------------------------------------------------தலைவர்.

No comments:

Post a Comment