
நல்ல தீர்ப்புக்கோர் புகழ் மாலை.
கோவையில் இயங்கி வரும் முன்நாள் காவல் அதிகாரி
களின் சங்கத்தலைவர் திரு.எம். இராஜசேகரன் (S.P.)
அவர்கள் பத்திரிக்கைக்கு இன்று 30-10-2009 அளித்த குறிப்பு
விபரம் வருமாறு :-
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில்
நடந்த வக்கீல்கள் போலீசார் மோதல் சம்பந்தமான
சம்பவங்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்
அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.
---------------------அதில் வழக்கறிஞர், போலீசார் நல்லுறவு
சமுதாய நன்மை கருதி பேணிக்காக்கப் படவேண்டும்
என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை நாட்டின் நலனில்
நாட்டமுள்ள நல்லவர்கள் அனைவரும் வாழ்த்தி
வரவேற்பார்கள்.
-------------------அதில் உயர்நீதிமன்றத்தின் மாட்சிமை நிலை
நிறித்தப்படவேண்டும் என்றும், அதற்கு குந்தகம்
விளைவிப்போர் தண்டனைக்குரியவர்கள் என்றும்
கூறப்பட்டுள்ளதை நெஞ்சாற வரவேற்கிறோம்.
----------இரவும் பகலும் தங்கள் இன்னுயிரை பணயம்
வைத்து ஊணின்றி உறக்கமின்றி ஊருக்காக
உழைத்திடும் காவல் துறையினர் தங்கள் கடமையை
நிறைவேற்றும் பொழுது சில சமயங்களில் சற்றும்
எதிர்பாராத சூழ்நிலை கட்டாயத்திற்கு உள்ளாகி
அவர்கள் சக்திக்கும் மீறிய சில தவறுகள் நடந்துவிடுவது
உண்டு. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தண்டனைக்கு
இல்க்காகப்பட்டுள்ள கடமை உணர்வு மிக்க
கண்ணியமான காவல்துறை அதிகாரிகளின் நிலை மறு
பரிசீலனைக்கு உரியது என்று கருதுகிறோம்.
-------------அதே சமையத்தில் உச்ச நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட உச்ச தீதிமன்ற நீதியர்சர் ஸ்ரீகிருஷ்ணா
அவர்களின் தலைமையிலான விசாரணைக்குழு
அறிக்கையில் கீழ்கண்ட உண்மைகள் ஆய்ந்து
அறியப்பட்டு உச்ச நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்
பட்டுள்ளன;
------1. இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு
அயல்நாட்டு தீவிர வாத இயக்கத்தை ஆதரித்து
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பல முறை மனித
சங்கிலிகள், உண்ணா விரதங்கள், ஆர்பாட்ட
ஊர்வலங்கள், ஆக்ரோஷ கோஷங்கள், கோர்ட்
புறக்கணிப்புக்கள் அதை மீறி கோர்ட்டில் ஆஜராகும்
கட்சிக்காரர்களுக்கு விசுவாசமான கடமையுணர்வு மிக்க
வக்கீல்களை மிரட்டி, தாக்கி வெளியேற்றுவது, இந்திய
அரசியலில் மிக முக்கியமான ஒரு அரசியல் தலைவரின்
உருவப்படத்தை தீயிட்டு கொழுத்துவது போன்ற சட்ட
விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது
வக்கீல்களில் ஒரு சிறிய கூட்டம்.
----2. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 17ம் தேதி
உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக
இரண்டு நீதிபதிகளின் முன்பாக விசாரணைக்கு
ஆஜராகியிருந்த ஒரு கட்சிக்காரரை அவதூறான
வார்த்தைகளில் திட்டி நீதிபதிகள் கண் எதிரில்
கோர்ட்டுக்குள்ளேயே, கோர்ட் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வேளையில் கோஷமிட்டு, ஆர்பரித்து,
அழுகிய முட்டையால் தாக்கியது ஒரு சிறு வக்கீல்கள்
கூட்டம்.
-------3. அதன் உச்சக்கட்டமாக இரண்டு நாள் கழித்து
மேற்படி சம்பவத்தின் சம்பந்தமாக காவல்நிலையத்தில்
சரணடைய வந்தவர்களும், அவருடைய நண்பர்களும்
கொண்ட ஒரு கூட்டம் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்,
உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸ்
ஸ்டேஷனையே தீ வைத்து கொளுத்தி உள்ளே இருந்த
அனைத்து ஆவணங்களையும், டி.வி, கேமராக்கள் மற்றும்
பொருட்களையும் பத்திரிக்கையாளர் முன்னால் தீ
வைத்து பொசுக்கியது.
---------மேற்படி சம்பவங்கள் அனைத்தும் வரலாற்றுச்
சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின்
மாட்சிமையையும், கம்பீரத்தையும், கணிசமான அளவிற்கு
நாசப்படுத்திவிட்டது என்பது ஊரறிந்த உண்மை. அதில்
சம்பந்தப்பட்டவர்கள் யார் யாரென்பது அனைத்து
ஊடகங்களிலும் தத்ரூப காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு
சாட்சியங்களாக உள்ளன. உயர்நீதிமன்றத்தின் மாசு
குறைய மாட்சிமையை நாசப்படுத்தும் விதத்தில்
செயல்பட்ட அந்த சட்ட விரோதக் கூட்டத்தினர் மீது
உயர்நீதிமன்றத்தின் உத்திரவுப்படி நடக்கவுள்ள
விசாரணையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
பட்டு தகுதியான தண்டனை வழங்கப்படும் பொழுது
தமிழக காவல்துறையினரின் தளர்ந்து போன உற்சாக
உணர்வு தலைநிமித்தி நிலை நிறுத்தப்படும் என்று
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
(உதவி :- என்.கே.வேலு எ.டி.எஸ்.பி.)
-----------------------------(காவல் தொடரும்)
No comments:
Post a Comment